Monday 9 April 2012

சல்மாவின் ஜாமங்களில் கரையும் உடல்-மொழி – முனைவர் வி. அருள்,




காலனியத்துவத்திற்குப் பிறகான சமூகத்தில் அரசியல், தத்துவம் முதலிய பல்வேறு நிறுவனங்கள் மனித வாழ்வியலில் நேரடியாக தாக்கம் செலுத்தின.  இம்முரண்களிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சிக்கும் போது அதனின் உள்வளையத்திற்குள் சிக்குண்டு உழலுகிறான்.  இவ் வாழ்வியலைப் பதிவு செய்யும் இன்றைக்கான இலக்கிய வடிவமாக புதின வகைமை திகழ்கிறது.  மனித வாழ்வியலின் பல உள் முரண் இயங்கியலை, அதன் விளைவு, நெளிவுக்கேற்றவாறு சொல்லக்கூடிய சக்தி புனைகதை வடிவத்திற்கு மட்டுமே உரியது.  புனைகதை வகைமைக்கு ஒரு பாரம்பரிய வரலாறு உண்டெனினும் இவ்வரலாற்றை 1980 முன் 1980க்கு பின் என பிரித்தறிவது அவசியம், 1980 முன் தமிழ்ப் புனைகதை பொருண்மை அடிப்படையிலும், எடுத்துரைக்கும் உத்தியிலும் பெரும் மாற்றமில்லை.  ஆனால் 1980 க்குப் பின் புனைகதை பல மாற்றங்களைப் பரிசோதனை முயற்சியோடு எதிர் கொண்டு வந்துள்ளது.  இதில் முக்கியமாக கதையமைப்பும் கதையை எடுத்துக் கூறும் முறைமையும் குறிப்பிடலாம்.
காலந்தோறும் வாழ்க்கையை பேசும் இலக்கியமானது பல்வேறு உள் முரணியலை தன் நிலைப்பாட்டோடு பதிவு செய்ததில்லை.  ஏனெனில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாகத் தான் புதினத்தைக் கருதினர்.  தன்னின் பரிசீலனையாகக் கருதவில்லை.  ஆனால் 1980 க்கு பிறகான புனைகதைகள் தன்னின் பரிசீலனையாகவும்  தன் மீதான சமூகத்தின் கருத்தியலையும் புனைவு வெளிக்குள் கொண்டு வந்தனர்.  இத்தகைய உத்திமுறைகளைப் பெண் படைப்பாளர்களிடம் இன்று அதிகமாக காணமுடிகிறது.  இதன் பின்னணியில் தான் சல்மா அவர்களையும் புரிந்துக் கொள்ளமுடிகிறது.  கவிஞராகத் தன் மனவெளி மௌனங்களை மிக நுண்ணிய அரசியலோடு வெளிப்படுத்தி தமிழ்க் கவிதையுலகின் வெற்றிடத்தை நிரப்பியவர்.  குறுகிய வெளியில் வாழ்வின் எதிர்வினையாக முடியும் கவிதையில் உள் முரண்களின் முழுமை வெளிப்படா போனதற்கான ஏக்கத்தை சல்மா கவிதைகளின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இம் மன அழுத்தத்திலிருந்து  விடுபட இரண்டாம் ஜாமங்களின் கதை எனும் நாவலை எழுதியுள்ளார்.

சல்மாவின் இந்நாவல் இஸ்லாமிய சமூகப் பெண்களின் குரலாக உள்ளது.  தமிழ்ப்  புனைகதையில் உடல் பற்றியும் உடல் மீதான வன்மங்கள் குறித்தும் ஆழ்ந்த பதிவுகள் ஏதுமில்லை. கு.ப.ரா , தி.ஜா போன்றோர்களின் பாலியல் உறவு குறித்த கதையாடல்களே மாற்றுப் பதிவாகக் கருதப்பட்டுவருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்மங்களைத் தனது நாவலுக்குள் மிக எதார்த்தமாக சல்மா பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய சமூகத்திற்குள் நிகழும் பெண் அடிமைத்தனம், ஆணின் வன்ம செயல் முதலியவற்றை வஹிதா-சிக்கந்தர் குடும்ப வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  
மதம் : பெண்கள் வாழ்வியல் முரண்
மனித வாழ்வியலில்  மதம் மிகப் பெரிய சர்வாதிகாரியாகத் திகழ்கிறது. மதங்களின் இறுக்கம் மனித வாழ்க்கையையே மாற்றுகின்றன. குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை. அசுலாம் சம்யம் பெண்களை மிகவும் இறுக்கமான இறுக்கமான சூழலிலேயே வைத்துள்ளது. இந்நாவலில்  ஒரு பகுதி மூன்று தலைமுறை இசுலாம் பெண்களின் வாழ் நிலையைக் கூறுகிறது. விதவையான பீவீயம்மாள், சமூகக் கட்டுப்பாடுகளுடன் எவ்வித பிறழ்வும் இன்றி தனக்கு நிகழ்த்தப்படும் துன்பத்தைக் கூடி விதி எனும் பெஉஅரில் எதிர்கொள்கிறார்.
இந்நாவலில் பாத்திமா, பிர்தவ்ஸ், நபியா போன்ற பெண்களின் இயல்பான வாழ்நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இஸ்லாமியம் பெண்ணியம்
ஆண்களின் ஆழ்மன விரத்தியை எதிர்மை பண்போடு பெண்களிடம் தான் தோப்பில் முகமது மீரான் தனது சாய்வு நாற்காலி நாவல் முழுக்க இவ்வுத்திமுறையைப் வெளிப்படுத்தியிருப்பார்.   சல்மாவும் தனது நாவலில் ஆண் கதாபாத்திரங்கள் முழுக்க எதிர் பண்போடு உலவ விட்டுள்ளார்.  இந்நாவலில் வரும் காதர், கரீம், சையது, ராவுத்தர், ஜமால் ராவுத்தர், லத்தீப், சிக்கந்தர், சுலைமான் என அனைத்து கதாபாத்திரங்களும் பெண்களின் மனப்பதிவில் வன்ம குணமுடையவர்கள் ஆவர்.  இந்நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்களைக் காம வெறியர்களாக கட்டமைத்துள்ளார்.  சிறந்த ஆண் ஒருவனை மையப்படுத்தியிருந்தால் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்திற்கே குறியீடாகப் புரிந்து கொள்வார்கள்.  அது மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரங்களை மழுங்கடிக்கவும் நேரிடும் இதனைக் கருத்திற் கொண்டே இந்நாவலாசிரியர் இவ்வுத்திமுறையைப் பின்ற்றியிருக்கலாம்.

வயதான ஆண்களுக்கு சிறு வயது பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது இஸ்ஸாமிய சமூகத்தில் நடைமுறையிலுள்ள  வழக்கம்.  சிறுபெண்ணின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத ஆண்கள் தனது ஆண் என்ற மனநிலையை வன்மமாக வெளிப்படுத்துகின்றனர்.  இதற்கு பதிலீடாக நபியா எனும் பெண் தனது உடல் தேவைக்கு வேறொரு மத ஆணோடு  பிணைப்பிணை ஏற்படுத்திக் கொள்கிறாள்.  இது தன் கணவனுக்கு தெரிய வரும் நிலையிலும அதைப்பற்றி எவ்வித மனஅதிர்வுமின்றி தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் செயல் இஸ்ஸாமிய பெண் சமூகத்தில் பெரிய கலக செயலாகவே உணரமுடிகின்றது. 
இச்சமூகப் பெண்கள் பருவமடைந்தவுடன் தனியாகவே இருக்க வேண்டிய சூழலை நிர்பந்திக்கின்றனர்.  ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு என்பது திருமணம்-இறப்பு நிகழ்வுகளில் மட்டுமே .  இந்நாவலில் இவ்விரு நிகழ்வுகளும் வருகின்றன.  இந்நிகழ்வுகளின் போது கூடும் பருவமடைந்த பெண்கள் தன்னின் உடல் பற்றிய பேச்சில் புணர்ச்சியின்  வாசனை வெளிப்படுவதை உணரமுடிகின்றது.
நபிதா-மும்தாஜ் இவர்களுக்கிடையே நிகழும் உறவு வாசகர்களிடை பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்துகிறது. 
இந்நாவலில் சல்மா பெண் சமுதாயத்தின் மீது திணித்துள்ள வன்மங்களைத் தகர்த்தெறிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.  இருப்பினும், சமய சார்ந்த நிகழ்வுகளில் எவ்வித மறுப்புமின்றி உடன்பாட்டு தன்மையோடு செல்வதை உணரமுடிகின்றது.  இந்நாவல் நிகழும் காலம் மிக குறைவானதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இஸ்ஸாமிய சமூகத்தின் வாழ்வியலைக் குறிப்பாக பெண்களின் உடல்-மன வெளிகளை விரிவாக பேசியுள்ளார்.  நாவல் மிக நீண்டிருப்பினும், எவ்வித வாசிப்பு சலமின்றி, இயல்பான கதைப்போக்கோடு அமைந்துள்ளது.  இதுவரை அறியப்படாத சமூகத்தின் உணர்வுகளை வெளிகொணர்ந்து நாவல் உலகிலுள்ள வெற்றிடத்தை நிரப்பியுள்ளார்.

                                           முனைவர் வி.அருள் , குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை

1 comment:

  1. Casino - Hotel WiFi - JtmHub
    JTG offers a 속초 출장안마 comfortable 창원 출장샵 and convenient accommodation with Wi-Fi in every guest room. This convenient 부천 출장마사지 accommodation 의왕 출장마사지 offers convenient access to our 공주 출장샵 casino and our nightclub

    ReplyDelete