Labels

Showing posts with label கட்டுரை ( நவீன இலக்கியம்). Show all posts
Showing posts with label கட்டுரை ( நவீன இலக்கியம்). Show all posts

Monday, 9 April 2012

தமிழ் நவீனத்துவத்தின் மேல் அதிரும் ஜி. நாகராஜனின் உடல் என்னும் பறை - முனைவர். நா.பிரவீன் குமார்



மத்தியதர வர்க்கத்தின் சாய் நாற்காலி அல்ல நாவல்..

நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை.மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் ,  தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் அதிகாரத்தை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சாந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமுறைகள் குறித்த கவனங்களை  விசாரணைகளைக் காண இயலுவதில்லை. வரலாறு எனும் பெரும் திரையில் மனித உடலின் வலியும் துடிப்பும் மிக்க நடனத்தைத் தமிழ் நாவல் மிக அரிதாகவே தொடுகிறது.வடிவத்தில் எத்தனைப் புதுத் திறப்புகள் வந்தாலும் அனுபவம் சார்ந்த தீவிரமான விரிந்த வாக்கைத் தளங்கள் இல்லாதபோது கலைரீதியாக ஒரு படைப்பு கொள்ளும் முடக்கம் இரங்கத்தக்கது. ஆனால் உலக நாவல் மேற்குறித்த நடுத்தர வர்க்கத் தன்மையைத் தாண்டி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. நவீன வாழ்க்கையின் நுண்களங்களைத் தீண்டவும், , சமூகம் வரலாறு பண்பாடு என்ற பின்னலான வெளியில் மனித சலனங்களை பிரதிபலிக்கவும், வாழ்வின் எல்லையின்மையை அகலத் தழுவி விரியும் விவாத வெளியை கட்டமைக்கவும் மிக நெகிழ்ந்ததும் உரையாடல் தன்மை வாய்ந்ததுமான ஓர் உயர் கலை வடிவம் நாவல்தான் என்பதை உலக நாவல் வரலாறு நிரூபித்திருக்கிறது.




 தமிழ்ப் புனைவில் எதிர் நவீனத்துவ அறம்..

தமிழ் நவீனத்துவத்தின் கட்டுபெட்டித் தனங்களுக்கு எதிராக, உள்ளிருந்து எழுந்த தீவிர குரல்களாக வெளிப்பட்ட  ஜி. நாகராஜன், பிரமிள் முதலியோர் சராசரித் தன்மைக்கு எதிரான தங்கள் கவர்ச்சிமிகு வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் நம்மை ஊடுருவுகின்றனர். இங்கு ஜி.நாகராஜனை எடுத்துக் கொள்ளும் போது குடும் எல்லைகள் தாண்டாத ஒரு தமிழ் நவீனத்துவத்திற்குள் உருவாகி வந்த நாவலின் நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராக அவரது பயணம் தொடங்குகிறது. ஜி. நா. வின் படைப்புலகம் முதலில் பௌதிகமான நிலைமைகளில் இயங்காத நவீனத்துவ புனைவுகளின் மனவெளியிலிருந்து, குருதியும் தசையுமாய் அதிர்ந்து கொண்டிருக்கும் சமூக எதார்த்தங்களின் அடிமட்டத்திற்கு தரை இறங்குகிறது.அப்படித்தான் குறத்தி முடுக்கு தமிழ்ப்புனைவில் ஒரு புதிய திறப்பாக வருகிறது. அது காட்டும் உலகம் நவீனத்துவத்தின் அறிவார்த்த நாகரீகத்தின் அதிர்ச்சிமிக்க பின்தோற்றம்.வரலாற்றின் இக்கட்டத்தில் மனித உடல்களின் புதிய அதிர்வுகளை அது ஏந்துகிறது. அங்கு நவீன யுகத்தின் கோட்பாட்டுத் தர்க்கங்களும் , கற்பித லட்சியங்களும் சிதறிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீன சமூக கண்ணாடிக் கவர்ச்சிகளின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் கைப்பையும் வன்மங்களையும் அது அகழ்ந்தெடுக்கிறது. குறத்தி முடுக்குவில் பேசப்படுவன எல்லாம் உடல்கள். அவை இந்த நவீன சமூக அதிகாரங்களின் அதிகபட்ச வன்முறைகளுடன் தம் அடிப்படை வாழ்விச்சைகளோடு மோதியபடியே தம் தினசரியில் நவீன வாழ்வின் புதிர்மிக்க நாடகத்தை  நடத்திக்கொண்டிருக்கின்றன. இதுதான் குறத்தி முடுக்கின் களம்.. இதன் மீதான ஒரு கோடிட்டுக் காட்டல்தான் தங்கம் என்ற பாலியல் தொழிலாளிக்கும் பெயர் சுட்டப்படாத ஒரு பத்திரிக்கையாளனுக்கும் இடையிலான, மரபான வடிவங்களில் பிடிபடாத ஒரு காதலின் புதிர்மிக்க சலனங்கள்.


இந்தப் பத்திரிக்கையாளன் வாழ்க்கை பற்றி சில தெளிவுகள் கொண்டவன். காமத்தை ஒரு இச்சை தீர்ப்பு என்பதுக்கு அப்பால், அதில் காதலின் மாய சிறகுகள் முளைப்பதற்கான சாத்தியங்களை ஏற்க மறுப்பவன்.ஆனால் தங்கத்துடனான உறவில் இவனது அனைத்து தர்க்கங்களும் சிக்கலடைந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் அவன் தங்கத்துடனான உறவில் மெல்ல மெல்ல காதலின் உயர்படி நிலைகளைக் கண்டடைகிறான். அனால் இவனது குணவார்ப்பின் எதிர்நிலைதான் தங்கம்.அவள் இறுதி வரை சமநிலை குலையாத ஆளுமை வார்ப்பு பெற்றவள்.அவளது காதல் எத்தகையது...அது உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறது.ஆனால் அவன் நாவல் முழுக்க இடறிக் கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை நிலைகொள்கிறாள். இந்த முரண் இவ்விருவருக்கிடையே வாழ்வின் அற்புதமான பகடையாட்டத்தை ஆடிக் காண்பிக்கிறது.இங்கு தான் ஜி. நாகராஜன் வாழ்க்கையை மிக அரிய கோணங்களில் நமக்கு வாசித்து காட்டுகிறார்.


ஆதி உடலை அகழ்ந்தெடுத்தலும் தொல் அறத்தை மீட்டலும்..

உயர்ந்த கலைப்படைப்புகள் பசி, காமம் முதலிய மனிதத்துவத்தின் மிக ஆதாரமான பிரச்சனைகளையே மையமிடுகின்றன. சிலம்பு மணிமேகலை போன்ற தமிழ்ப் பேரிலக்கியங்கள் இதன் உயர் லட்சிய வடிவங்கள் எனலாம். மனிதன் வரலாற்றின் வழி வந்தவன். இயற்கையிலிருந்தும் உயிரியல்புகளிலிருந்தும் மிகச் சேய்மைபட்ட கலாச்சார வாழ்வியலை வந்தடைந்திருப்பவன். இந்த நவீன மனிதனுக்குள் உள்ளுறைந்திருக்கும் தொல்பண்பையும் உயிரிச்சைகளில் கலாச்சார மயக்கங்களற்ற நிர்வாணத்தன்மையையும் வெளிக்கொணரத்தான் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. மனிதனுக்குள் காணாமல் போன தொல்மனிதனை தொட்டுவிட ஒருவகையில் இலக்கியங்கள் முயல்கின்றன. ஜி. நா. வின் குறத்தி முடுக்கு உள்ளிட்ட படைப்புகள் இந்த திசையில் செல்வதாகத்தான் படுகிறது. குறத்தி முடுக்குவில் மீண்டும் மீண்டும் பேசப்படுவது காமமும் பசியும்தான்.


மனித உடல் ஓர் உயிரியல் அமைப்பு மட்டுமல்ல.அது ஒரு சமூக வரலாற்று பண்பாட்டுக் கட்டமைப்பாக இருக்கிறது.சமூக மதிப்பீடுகளை கடத்தும் ஊடகமாகவும் கலாச்சார புனைவுகளைக் கற்பிதங்களை ஏற்று அதன் ஒழுங்குமுறைகளை , நடத்தை விதிமுறைகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களாகவும் மனித உடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுக்க்களிலிருந்து விடுவித்து மனித உடலின் ஆதி இயற்கைத்தன்மையை, வேட்கையை அதன் குழந்தைமையை, இசைமையை மீட்ட பாலியலை மையமிடும் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. பெண்ணியவாதிகள் இக்கோணத்தில் உடலரசியல் என்ற கூரிய பரிமாணத்தில் பேசி வருவதை நாம் அறிவோம்.குறத்தி முடுக்குவில் ஆளப்படும் பாலியலும் இந்த தளத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர முடிகிறது .மனித சமூகத்தில் காமம் ஒரு இயற்கை நடவடிக்கையாயன்றி பால் சார், பண்பாடு சார் புனைவுகளும் அதிகாரங்களும் கொண்டவையாய் நிகழ்கிறது. பதற்றங்களும் தன்முனைப்பும் நிறைந்த இந்த நாடகீயமான காமத்தின் ஆழத்தில் மனிதத்துவத்தின் துடிப்புமிக்க களங்கமற்ற பால் விழைவை ஜி. நா.வின் எழுத்து எப்போதும் மீட்டெடுக்கிறது. அரசியல்மயமாகப்பட்ட பாலியலை திரைவிலக்கி அதன் ஆழத்தில் துளிர்க்கும் ஆதிமனத்தின் அன்பை அது எப்போதும் துளிர்க்கச்செய்கிறது.



குறத்தி முடுக்குவின் எந்த கதாபாத்திரங்களும் முழுமையாக குணவார்ப்பு பெற்றவையல்ல. அவை மூட்டமான நிழலுருவங்களாகவே வந்து செல்கின்றன, ஒவ்வொரு வாழ்விலிருந்தும் ஜி. நா காண்பிப்பது ஒரு வெட்டுக் காட்ச்சி மட்டுமே. அனால் அவை இட்டு நிரப்ப வேண்டிய கணமான இடைவெளிகளை வாசகத் தரப்பில் நிறுத்துகின்றன.ஒவ்வொரு பாத்திரமும் காமத்தின் ஆழத்தில் ஒளிரும் காதலையும் காதலின் பாசாங்கில் மறைந்துள்ள காமத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.


தமிழ்ப் புனைவு வெளியில் பாலியலின் மாறுபட்ட தடங்கள்

பாலியலை கலையின் ஓர் உயிர்ப்பகுதியாக வைத்துப் பேணிய கலைப்பாரம்பரியம் நமது எனினும் பாலியலை மனித அறிவாதிக்கத்திலிருந்து விடுதலை செய்யும் முயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு புனைகதைப் பரப்பை நோக்கும்போது கு.ப.ரா., தி.ஜா., ஜெயகாந்தன் முதலிய முன்னணிப் படைப்பாளிகள் நம் நினைவுக்கு வரலாம். கு.பா.ரா பாலியலைத் தாண்டிய இலட்சிய நிலைப்படுத்தப்பட்ட காதலைத்தான் முன்வைக்கிறார். தி.ஜா. பாலியலை எழுதும்போது அதில் ஒரு நிலமானிய கால ரசனை ரேகையொன்று ஓடுவதை மறுப்பதற்கில்லை. ஜெயகாந்தன் பாலியலை கையாளும்போதெல்லாம் வெளிப்படும் அவரது அறிவார்த்த முனைப்புகள் சலிப்பூட்டக் கூடியது. முழுக்க முழுக்க ஒரு விளிம்பு நிலை வாழ்விலிருந்து, பாலியலின் அரசியலை உரித்து, மனித இயல்பூக்கங்களை பேச விழையும் ஜி. நாகராஜனின் படைப்புலகம் முன்குறித்த எதன் சாயலுமற்ற முன்னுதாரணங்களற்ற புதிய பிரதேசத்தை அறிமுகப்படுத்துகிறது.


அந்த மின்பரிமாற்றம் தொலைவில் நிகழவில்லை ..

குறத்தி முடுக்குவின் இறுதிப் பகுதி ஒரு உருவகமான காட்சியோடு நிறைவுறுகிறது. தனக்குள் காதலின் பேரலைகளை எழுப்பிவிட்டு தன் பழைய கணவனோடு வாழச்சென்றுவிட்ட தங்கத்தைத்  தற்செயலாகப் பார்க்க நேர்ந்த அந்தப் பத்திரிக்கையாளன் அவளது வீடு வரை சென்று ஒரு விருந்தாளியின் அசௌகரியத்தோடும் அந்நியத்தோடும் இருந்துவிட்டு அறைக்குத் திரும்புகிறான். தங்கத்தின் தேர்வுகள் அவனது தர்க்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கின்றன. வாழ்வின் எந்த நிலையிலும் குலையாத அவளது சமனிலை முன் அவன் கொந்தளிக்கிறான். ஆற்றாமை..ஏமாற்றம்அறையில் அவனுக்குத் தூக்கமில்லை.இறங்கி வெளியே நடக்கிறான்தொலைவில் ஒரு மின்னல் வெட்டுகிறது..தொலைவில் நிகழ்ந்த ஒரு மின்பரிமாற்றம்என்கிறார் ஜி. நா. அது அவனுக்குள் நிகழ்ந்துள்ள பெரும் குணமாற்றத்தை சூசகமாக உணர்த்துகிறதா. மின்னல் வெட்டிவிட்டது.ஆனால் இடிச்சத்தம் இன்னும் கேட்கவில்லை. தான் எவ்வளவு மாறிவிட்டோம் என்பதை அவன் உணர்கிறான்.ஆனால் அதன் தர்க்கம் இன்னும் அவனுக்குப் புலப்படவில்லை. மழை அடித்துப் பேய வேண்டும் என நினைத்துக்கொள்கிறான். அவன் மனதை நிரப்பும் அந்த கணமான வெக்கையை அது ஒன்றே அப்போதைக்குப் போக்க முடியும்.


அறம் தொலைத்த உற்பத்திப் பெருக்கம் -  தமிழ் நாவல் இன்று
 
                   இன்று தமிழ்ப் புனைகதைப் படைப்பியக்கம் உலகமயமாக்கலுக்குப் பிறகான சந்தை பொருளாதாரத்தின் புதிய  பொருளியல் பண்பாட்டு அலைகளில் சிக்குற்று தன்  சாரம் தூர்ந்து போய் நிற்கிறது. நவீன இலக்கியமே பெரும் உற்பத்தி வெளியாகி உள்ளது. தீவிர உழைப்பின் பின்னணியிலான , கலை இயக்கங்களின் பின்னணியிலான கண்டுபிடிப்புகளும் கருத்தியல்களும் அதன் உள்ளடக்கமும் அறங்களும் இழந்து விற்பனைக்குத் தயாரான பண்டப் பொருள்களாகியுள்ளன. இன்று ஒரு புனைகதைப் படைப்பாளி வாசகர் திரளை ஒரு சந்தையாக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு அறம் இழந்த போயுள்ளான். இதன் பின்னணியிலேயே சந்தை விழைவுகளோடு  பெரிய அளவிலான பல நூறு பக்க நாவல்கள் வருகின்றன. பெரிய நாவல்களுக்கான தேவையான விரிந்த  சமூக வரலாற்றுத் தளங்களுக்கான உண்மையான பிரக்ஞை ஏதுமின்றி சந்தையை மட்டுமே குறிவைத்து இவை பெருகுகின்றன. இந்நிலையில் மிகவும் சனாதனத் தன்மையோடு விளங்கிய ஒரு தமிழ் நவீனத்துவத் தலைமுறைக்குள் நின்றபடி  அதன் அனைத்து அதிகாரங்களையும் ஊடறுத்து உடலையே , உடல் பற்றிய பிரக்ஞையையே ஒரு பறை போல் அதிர வைத்த ஜி. நாகராஜனிடமிருந்து நாம் இன்றுக்கான அற ஊக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

                                                     - பிரவீண் குமார், உதவிப் பேராசிரியர், குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை

சல்மாவின் ஜாமங்களில் கரையும் உடல்-மொழி – முனைவர் வி. அருள்,




காலனியத்துவத்திற்குப் பிறகான சமூகத்தில் அரசியல், தத்துவம் முதலிய பல்வேறு நிறுவனங்கள் மனித வாழ்வியலில் நேரடியாக தாக்கம் செலுத்தின.  இம்முரண்களிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சிக்கும் போது அதனின் உள்வளையத்திற்குள் சிக்குண்டு உழலுகிறான்.  இவ் வாழ்வியலைப் பதிவு செய்யும் இன்றைக்கான இலக்கிய வடிவமாக புதின வகைமை திகழ்கிறது.  மனித வாழ்வியலின் பல உள் முரண் இயங்கியலை, அதன் விளைவு, நெளிவுக்கேற்றவாறு சொல்லக்கூடிய சக்தி புனைகதை வடிவத்திற்கு மட்டுமே உரியது.  புனைகதை வகைமைக்கு ஒரு பாரம்பரிய வரலாறு உண்டெனினும் இவ்வரலாற்றை 1980 முன் 1980க்கு பின் என பிரித்தறிவது அவசியம், 1980 முன் தமிழ்ப் புனைகதை பொருண்மை அடிப்படையிலும், எடுத்துரைக்கும் உத்தியிலும் பெரும் மாற்றமில்லை.  ஆனால் 1980 க்குப் பின் புனைகதை பல மாற்றங்களைப் பரிசோதனை முயற்சியோடு எதிர் கொண்டு வந்துள்ளது.  இதில் முக்கியமாக கதையமைப்பும் கதையை எடுத்துக் கூறும் முறைமையும் குறிப்பிடலாம்.
காலந்தோறும் வாழ்க்கையை பேசும் இலக்கியமானது பல்வேறு உள் முரணியலை தன் நிலைப்பாட்டோடு பதிவு செய்ததில்லை.  ஏனெனில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாகத் தான் புதினத்தைக் கருதினர்.  தன்னின் பரிசீலனையாகக் கருதவில்லை.  ஆனால் 1980 க்கு பிறகான புனைகதைகள் தன்னின் பரிசீலனையாகவும்  தன் மீதான சமூகத்தின் கருத்தியலையும் புனைவு வெளிக்குள் கொண்டு வந்தனர்.  இத்தகைய உத்திமுறைகளைப் பெண் படைப்பாளர்களிடம் இன்று அதிகமாக காணமுடிகிறது.  இதன் பின்னணியில் தான் சல்மா அவர்களையும் புரிந்துக் கொள்ளமுடிகிறது.  கவிஞராகத் தன் மனவெளி மௌனங்களை மிக நுண்ணிய அரசியலோடு வெளிப்படுத்தி தமிழ்க் கவிதையுலகின் வெற்றிடத்தை நிரப்பியவர்.  குறுகிய வெளியில் வாழ்வின் எதிர்வினையாக முடியும் கவிதையில் உள் முரண்களின் முழுமை வெளிப்படா போனதற்கான ஏக்கத்தை சல்மா கவிதைகளின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இம் மன அழுத்தத்திலிருந்து  விடுபட இரண்டாம் ஜாமங்களின் கதை எனும் நாவலை எழுதியுள்ளார்.

சல்மாவின் இந்நாவல் இஸ்லாமிய சமூகப் பெண்களின் குரலாக உள்ளது.  தமிழ்ப்  புனைகதையில் உடல் பற்றியும் உடல் மீதான வன்மங்கள் குறித்தும் ஆழ்ந்த பதிவுகள் ஏதுமில்லை. கு.ப.ரா , தி.ஜா போன்றோர்களின் பாலியல் உறவு குறித்த கதையாடல்களே மாற்றுப் பதிவாகக் கருதப்பட்டுவருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்மங்களைத் தனது நாவலுக்குள் மிக எதார்த்தமாக சல்மா பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய சமூகத்திற்குள் நிகழும் பெண் அடிமைத்தனம், ஆணின் வன்ம செயல் முதலியவற்றை வஹிதா-சிக்கந்தர் குடும்ப வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  
மதம் : பெண்கள் வாழ்வியல் முரண்
மனித வாழ்வியலில்  மதம் மிகப் பெரிய சர்வாதிகாரியாகத் திகழ்கிறது. மதங்களின் இறுக்கம் மனித வாழ்க்கையையே மாற்றுகின்றன. குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை. அசுலாம் சம்யம் பெண்களை மிகவும் இறுக்கமான இறுக்கமான சூழலிலேயே வைத்துள்ளது. இந்நாவலில்  ஒரு பகுதி மூன்று தலைமுறை இசுலாம் பெண்களின் வாழ் நிலையைக் கூறுகிறது. விதவையான பீவீயம்மாள், சமூகக் கட்டுப்பாடுகளுடன் எவ்வித பிறழ்வும் இன்றி தனக்கு நிகழ்த்தப்படும் துன்பத்தைக் கூடி விதி எனும் பெஉஅரில் எதிர்கொள்கிறார்.
இந்நாவலில் பாத்திமா, பிர்தவ்ஸ், நபியா போன்ற பெண்களின் இயல்பான வாழ்நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இஸ்லாமியம் பெண்ணியம்
ஆண்களின் ஆழ்மன விரத்தியை எதிர்மை பண்போடு பெண்களிடம் தான் தோப்பில் முகமது மீரான் தனது சாய்வு நாற்காலி நாவல் முழுக்க இவ்வுத்திமுறையைப் வெளிப்படுத்தியிருப்பார்.   சல்மாவும் தனது நாவலில் ஆண் கதாபாத்திரங்கள் முழுக்க எதிர் பண்போடு உலவ விட்டுள்ளார்.  இந்நாவலில் வரும் காதர், கரீம், சையது, ராவுத்தர், ஜமால் ராவுத்தர், லத்தீப், சிக்கந்தர், சுலைமான் என அனைத்து கதாபாத்திரங்களும் பெண்களின் மனப்பதிவில் வன்ம குணமுடையவர்கள் ஆவர்.  இந்நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்களைக் காம வெறியர்களாக கட்டமைத்துள்ளார்.  சிறந்த ஆண் ஒருவனை மையப்படுத்தியிருந்தால் ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்திற்கே குறியீடாகப் புரிந்து கொள்வார்கள்.  அது மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரங்களை மழுங்கடிக்கவும் நேரிடும் இதனைக் கருத்திற் கொண்டே இந்நாவலாசிரியர் இவ்வுத்திமுறையைப் பின்ற்றியிருக்கலாம்.

வயதான ஆண்களுக்கு சிறு வயது பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது இஸ்ஸாமிய சமூகத்தில் நடைமுறையிலுள்ள  வழக்கம்.  சிறுபெண்ணின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத ஆண்கள் தனது ஆண் என்ற மனநிலையை வன்மமாக வெளிப்படுத்துகின்றனர்.  இதற்கு பதிலீடாக நபியா எனும் பெண் தனது உடல் தேவைக்கு வேறொரு மத ஆணோடு  பிணைப்பிணை ஏற்படுத்திக் கொள்கிறாள்.  இது தன் கணவனுக்கு தெரிய வரும் நிலையிலும அதைப்பற்றி எவ்வித மனஅதிர்வுமின்றி தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் செயல் இஸ்ஸாமிய பெண் சமூகத்தில் பெரிய கலக செயலாகவே உணரமுடிகின்றது. 
இச்சமூகப் பெண்கள் பருவமடைந்தவுடன் தனியாகவே இருக்க வேண்டிய சூழலை நிர்பந்திக்கின்றனர்.  ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு என்பது திருமணம்-இறப்பு நிகழ்வுகளில் மட்டுமே .  இந்நாவலில் இவ்விரு நிகழ்வுகளும் வருகின்றன.  இந்நிகழ்வுகளின் போது கூடும் பருவமடைந்த பெண்கள் தன்னின் உடல் பற்றிய பேச்சில் புணர்ச்சியின்  வாசனை வெளிப்படுவதை உணரமுடிகின்றது.
நபிதா-மும்தாஜ் இவர்களுக்கிடையே நிகழும் உறவு வாசகர்களிடை பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்துகிறது. 
இந்நாவலில் சல்மா பெண் சமுதாயத்தின் மீது திணித்துள்ள வன்மங்களைத் தகர்த்தெறிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.  இருப்பினும், சமய சார்ந்த நிகழ்வுகளில் எவ்வித மறுப்புமின்றி உடன்பாட்டு தன்மையோடு செல்வதை உணரமுடிகின்றது.  இந்நாவல் நிகழும் காலம் மிக குறைவானதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இஸ்ஸாமிய சமூகத்தின் வாழ்வியலைக் குறிப்பாக பெண்களின் உடல்-மன வெளிகளை விரிவாக பேசியுள்ளார்.  நாவல் மிக நீண்டிருப்பினும், எவ்வித வாசிப்பு சலமின்றி, இயல்பான கதைப்போக்கோடு அமைந்துள்ளது.  இதுவரை அறியப்படாத சமூகத்தின் உணர்வுகளை வெளிகொணர்ந்து நாவல் உலகிலுள்ள வெற்றிடத்தை நிரப்பியுள்ளார்.

                                           முனைவர் வி.அருள் , குரு நானக் கல்லூரி, தமிழ்த்துறை